முஷாரப்பை கொல்ல ஆள் அனுப்ப முயன்ற பெண்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல தீட்டப்பட்ட சதி உரிய நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஐஜி செளகத் ஜாவேத் பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியின் மத குருக்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் என்பவரின் மனைவி உம் இ ஹசன், தன்னிடம் பயின்று வந்த மாணவிகள் சிலரைப் பயன்படுத்தி முஷாரப்பைக் கொல்லும் மனித வெடிகுண்டுகளாக அனுப்ப திட்டமிட்டு பயிற்சி அளித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலைமாதம் லால் மசூதியில் நடந்த ராணுவ வேட்டையின்போது பர்க்கா அணிந்தபடி தப்பி ஓட முயன்றார் அஜீஸ். அப்போது அவரை ராணுவம் கைது செய்தது.
அப்போதுதான் உம் இ ஹசனின் சதித் திட்டம் வெளிப்பட்டு அது முறியடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஆனால் இதை உம் இ ஹசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானோ அல்லது எனது மாணவிகளோ ஒருபோதும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை ஆதரித்ததில்லை. அதுபோன்ற மனித வெடிகுண்டு கொள்கையையும் நாங்கள் ஆதரித்ததில்லை.
ஐஜியின் பேச்சு உள்நோக்கம் கொண்டது, தவறான பிரசாரம். இதுகுறித்து பஞ்சாப் மாகாண முதல்வர் விசாரணை நடத்த வேண்டும்.
இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் அதிபர் முஷாரப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சதித்திட்டமாகும். இதில் தலிபானுக்கோ அல்லது வேறு எந்த தீவிரவாத அமைப்புக்கோ தொடர்புஇல்லை.
உடனடியாக முஷாரப்பை ராணுவத் தளபதி கைது செய்ய வேண்டும். அவரை அதிபர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்.
லால் மசூதியை பின்லேடனின் ஆதரவாளர்கள் நடத்தி வருகிறார்கள், அல் கொய்தா தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று முஷாரப் அரசு கூறி வந்தது. ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்பதை முஷாரப் விளக்க வேண்டும்.
எனது மாணவர்களை ரத்தக்களறியில் மூழ்கடித்த முஷாரப் போக வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் புரட்சி வெடிக்கும். ரத்தக் களறி ஏற்படும் என்றார் அவர்.
பெண்கள் பள்ளியைப் பிடித்த தலிபான்:
இதற்கிடையே, பாகிஸ்தானின் பெஜாவூர் பழங்குடியின பகுதியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியையும், மருத்துவமனையையும் தலிபான் தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். இந்தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில்உள்ளது.
இரு கட்டடங்களும் பெஜாவூர் பழங்குடியின பகுதியைச் சேர்ந்த சர்மாக் என்ர இடத்தில் உள்ளன.
பெண்கள் பள்ளிகளை குறி வைத்து சமீப காலலமாக தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல பள்ளிகளை அவர்கள் கைப்பற்றி தீ வைத்துக் கொளுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போலியோ தடுப்பூசி திட்டத்தையும் தலிபான்கள் எதிர்த்து வருகின்றனர். இது குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் என்பது அவர்களின் கருத்து. மேலும் பெண்கள் பள்ளிகளை கைப்பற்றி அவற்றை மதப் பள்ளிகளாக மாற்றியும் வருகின்றனர்.
இந்த நிலையில் தலிபான்களை பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் பழங்குடியின மதத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சமாதானக் குழுவை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதவிர இஸ்லாமிய கோர்ட்டுகளையும் தலிபான்கள் நிறுவி வருகின்றனர். இந்த கோர்ட்டில், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கூறிஇருவரை நிறுத்தி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். இருவரும் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.