மலேசியாவில் சித்ரவதை: வாலிபருக்கு மதுரையில் சிகிச்சை
மதுரை: மலேசியாவில் வேலைக்குச் சென்று சித்ரவதைக்கு ஆளான தமிழக வாலிபர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கொடுங்குளத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பன் - செல்லம்மாள் தம்பதியின் மகன் பிரபு (21). எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ரூ.85,000 செலவு செய்து ஏஜென்ட் காளைலிங்கம் என்பவர் மூலம் பிரபு மலேசியாவுக்கு சென்றார். அங்கு கார்களை கழுவி சுத்தப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். முதலில் ரூ.8,000 சம்பளம் தரப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் பேசியபடி சம்பளம் தரவில்லை. தங்கும் இடமும், சாப்பாடும் மட்டுமே கொடுக்கப்பட்டது. சம்பளம் பற்றி கேட்டபோதெல்லாம் பிரபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரபுவுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார்.
அப்போது மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த ரவி என்பவருடன், பிரபுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொண்ட பிரபு, தன்னுடையை நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவருத பெற்றோர் பிரபுவுக்கு ரூ.12,000 அனுப்பி வைத்தனர். பிரபு, அந்த பணத்தை வைத்து கடந்த ஜூலை 21ம் தேதி கல்லல் வந்து சேர்ந்தார். உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் அவதிப்பட்டு வந்தார்.
பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபு கூறுகையில், மலேசியா சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சென்றேன். ஆனால் கூறியபடி சம்பளம் கொடுக்காமல் கொடுமை செய்தனர்.
என்னைப் போல இன்னும் ஏராளமானோர் மலேசியாவில் சிரமப்பட்டு வருகின்றனர். என்னுடன் வேலை பார்த்த நத்தத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் கொத்தடிமை போல் இருக்கிறார். அவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.