கார் விபத்தில் இன்ஸ்பெக்டர்-மனைவி பலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவரது மனைவியும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் குழந்தைகள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் உத்தமப்பாளைத்தைச் சேர்ந்தவர் கோபால் (44). மதுரை தெற்கு வாசல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி பரிமளா (32), மகள் சூர்யா (16), மகன்கள் அர்ச்சுனன் (12), கார்த்திக் (10) ஆகியோருடன் காரில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். டிரைவர் ராஜா (32) காரை ஓட்டினார்.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு திண்டிவனம் அருகில் உள்ள கேணிப்பட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோபால், அவரது மனைவி பரிமளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த சூர்யா, அர்ச்சுனன், கார்த்திக் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் கோபால் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.