கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார் ஜெகத்ரட்சகன்

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டார்.
பின்னர் தனியாக வீர வன்னியர் பேரவை மற்றும் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.
சமீப காலமாக முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஏகமாக புகழ்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். கவிதை மழையாய் பொழிந்து வந்த அவரது அறிக்கைளைப் பார்த்து திமுகவினரே சற்று அசந்து போயினர்.
எனவே விரைவில் திமுகவில் ஜெகத்ரட்சகன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் கருணாநிதியை சந்தித்த ஜெகத்ரட்சகன், திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து அங்கு உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து திமுகவில் இணந்தார்.
அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். ஜெகத்ரட்சகன் கட்சி நிர்வாகிகளுடன் அவருடன் திமுகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்தபோது, 1998ம் ஆண்டு அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜெகத்ரட்சகன். இந்த முறை அவரை அரக்கோணம் தொகுதியில் திமுக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரக்கோணம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக கூட்டணியை விட்டு விலகியுள்ள நிலையில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகனை திமுகவுக்கு இழுத்திருப்பது, அந்த சமுதாயத்தினர் மத்தியில் தான் தனிமைப்பட்டு விடக் கூடாது என்ற திமுகவின் எண்ணத்தால்தான் என்று கருதப்படுகிறது.
ஜெகத்ரட்சகன் அரசியல் தவிர கல்விப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இவரது கல்வி நிறுவனங்கள் பாரத் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வருகின்றன.
பாரத் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி நாராயண மருத்துவ அறிவியல் கழகம், பாரத் அறிவியல், தொழில்நுட்பக் கழகம், ஸ்ரீபாலாஜி பிசியோதெரபி கல்லூரி, ஸ்ரீபாலாஜி நர்சிங் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications