வருண் காந்திக்கு முலாயம் சிங் ஆதரவு!
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, அவர் மீது எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை சரியில்லை என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார் மாயாவதி.
மேலும் வருண் காந்தி மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது என்றாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி இருப்பதால் அவர் விடுதலையாக முடியாது.
இந் நிலையில் வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவரும் மாயாவதியின் தீவிர எதிர்ப்பாளருமான முலாயம் சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு சட்டம், கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்த கொண்டு வரப்பட்டது. அதை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது தவறு.
இந்த விஷயத்தில் பாஜக, பகுஜன் சமாஜ் இரண்டுமே அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றன. கலவரம் உருவாகும் அளவுக்கு கோர்ட்டு முன்பும், ஜெயில் முன்பும் கூட்டம் கூட போலீசார் அனுமதித்தது ஏன்? என்றார்.
இன்னும் தண்டனை வேண்டும்-லாலு:
ஆனால், வருண் காந்திக்கு தரப்பட்ட தண்டனை போதாது என்று ரயில்வே அமைசசரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருணைப் பிடித்து 10க்கு 10 அறையில் தனிமைச் சிறையில் அடைத்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் என்றார்.
மாயாவதிக்கு முஸ்லீம் தலைவர்கள் ஆதரவு:
வருண் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததற்கு உத்தரப் பிரேதச மாநில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல அமைப்புகள் மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் வரும் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லீம்களின் பெரும் ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முலாயம் சிங்கையும் காங்கிரசையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பின்போது உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங்குடன் முலாயம் கூட்டணி வைத்ததால் முஸ்லீம்களிடையே அவருக்கு அதிருப்தி நிலவுகிறது. இந் நிலையில் தனது நடவடிக்கையால் இஸ்லாமிய வாக்குகளை அதிரடியாக ஈர்த்துள்ளார் மாயாவதி.
இந் நிலையில் மாயாவதி எதிர்ப்பு வாக்குகளை ஈர்க்கும் வகையில் வருணுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முலாயம் சிங். இது பாஜகவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வருணுக்கு 'நோ' சொன்ன சுஷ்மா:
இதற்கிடையே வருண் காந்தியை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கப்பட்டால் பாஜக ஓட்டு சிதறிவிடும். இதனால் அவரை மபியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கப் போவதில்லை என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் மபி மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.
சுஷ்மா கூறுகையில், வருண் காந்திக்கு மபியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கப்பட மாட்டார். அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என எந்த தலைவரும் பாஜகவிடம் கேட்கவில்லை.
அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தால் ஓட்டுக்கள் சிதறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. பாஜகவுக்கு அனைத்து இந்துக்களும் ஓட்டு போடுவார்கள் என கூற முடியாது. அதே சமயத்தில் மபியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு மற்ற மதத்தினரும் ஓட்டுபோட்டு வருகின்றனர்.
தேசிய அளவில் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறோம் என்றார் சுஷ்மா.