ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கைதான 3 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள், புதுக்கோட்டை சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், 13 மாணவர்கள் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி மார்க்கெட் பகுதியில் சமீபத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு முக்கிய காரணமான ப.சிதம்பரத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறி அவர்கள் பிரசாரம் செய்தனர். துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காங்கிரஸார் மாணவர்களை கல்வீசித் தாக்கினர். இதனால் அங்கு பெரும் மோதல் மூண்டது.
விரைந்து வந்த போலீஸார் 13 மாணவர்களையும் அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 13 பேரில், ஆசிப், முத்து கிருஷ்ணன், செந்தில் ஆகிய மூன்று மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாக முத்துக்குமார் எழுச்சி இயக்கத்தின் சார்பில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.