For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக தலைவர்கள் என்னை வாழ்த்தினர்-ராஜபக்சே

By Staff
Google Oneindia Tamil News

Rajapakshe
டெல்லி: விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்று கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.

இதுகுறித்து தி வீக் இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் ராஜபக்சே கூறியிருப்பதாவது:

இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை, தீவிரவாதத்துக்கு எதிராக தெற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசாரத்தின் ஒரு பகுதிதான் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவுக்காக போரிட்டது இலங்கை...

உண்மையில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்காக போரிட்டு விடுதலைப்புலிகளை நான் ஒழித்துக் கட்டி இருக்கிறேன். விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலில் சோனியாகாந்தி வெற்றி பெற்றதைப்போல், போரில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறேன்.

போரின் போது இந்தியா அளித்த தார்மீக ஆதரவு மிகவும் முக்கியமானது ஆகும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும்.

போரில் இலங்கை அரசு வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நிலைமை தேர்தலில் என்ன ஆனது? என்று பாருங்கள். விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதில் அளித்து விட்டார்கள்.

தமிழர்கள் பங்கு கொண்டுள்ள சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் செயல்பாடுகள் சரியில்லாமல் உள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட பகுதியில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

தமிழ்நாட்டில் உறவினர்கள் உள்ளனர்...

தமிழ்நாட்டில் எனது உறவினர்கள் இருக்கின்றனர். எனவே அங்கு சென்று வர எனக்கு அழைப்பு தேவை இல்லை. குடும்ப ரீதியாக இந்தியாவுடன் எனக்கு தொடர்பு உள்ளது என்றார் ராஜபக்சே.

தமிழக தலைவர்கள் தன்னை வாழ்த்தியதாக கூறியுள்ள ராஜபக்சே, எந்தத் தலைவர் தன்னை வாழ்த்தினார் என்பதைத் தெரிவிக்கவில்லை.

அடுத்த வாரம் டெல்லி வருகை:

இந் நிலையில் ராஜபக்சே அடுத்த வாரம் டெல்லிக்கு வரவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து அவர் பேச வரவுள்ளதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X