பொள்ளாச்சி நகை கடையில் 80 பவுன் கொள்ளை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பூட்டிய நகைக்கடையின் ஓட்டை பிரித்து கடையில் இருந்த சுமார் 80 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், காமாட்சியம்மன் கோயில் வீதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் எஸ்எஸ் வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் பணி முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று
விட்டார்.
இந்நிலையில் அதிகாலையில் பக்கத்து கடைக்காரர் ஒருவர், ராஜேந்திரனுக்கு போன் செய்து உங்கள் கடையில் ஓடு பிரிக்கப்பட்டு இருக்கிறது என தகவல் கொடுத்தார்.
இதையடுத்து கடைக்கு விரைந்து வந்த ராஜேந்திரன், உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் லாக்கர்கள் உடைக்கப் பட்டு அதிலிருந்து 80 பவுன் நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 9 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.