ஏழைகளிடம் ரூ. 1.5 கோடி மோசடி - 2 தம்பதிகள் கைது
சென்னை: குறைந்த வட்டிக்குக் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏழை எளிய பெண்களிடம் ரூ. 1.5 கோடி அளவுக்கு மோசடி செய்த 2 தம்பதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (35). இவர் தான் சமூகசேவகி என்றும் தனக்கு பல அறக்கட்டளைகள் தெரியமென்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் கூறி வந்துள்ளார்.
மேலும், அந்த அறக்கட்டளைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளார். இதுதவிர குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதில் மயங்கிய பல பெண்களிடம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை கமிஷனாக பெற்று கொண்டுள்ளார்.
அவர்களுக்கு நவயுகா அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி சீதாலட்சுமி பணம் வாங்கி தரவில்லை.
நவயுகா அறக்கட்டளையை சீதாலட்சுமியுடன் இணைந்து, அவரது கணவரான பால் வியாபாரி சிவசண்முகம், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி அனு, வேலு மற்றும் அவரது மனைவி சரளா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரிலும் ஒரு அமைப்பை இந்தக் கும்பல் வைத்திருந்தது. சிவசண்முகத்தின் வீட்டில்தான் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.
இவர்களிடம் கிட்டத்தட்ட 900 பேர் பணம் கட்டியுள்ளனர்.
ஒரு மாதமாகியும் கடன் வராததால் சீதாலட்சுமியிடம் கேட்டனர். இதையடுத்து திருவிக பூங்காவில் அனைவரையும் கூட்டி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார்
சீதாலட்சுமி.
அப்போது கடன் தரும் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி என்று ஒருவரை கூட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், சிலருக்கு கடன் பெறத் தகுதி இல்லை என்று கூறி அவர்கள் கொடுத்த ரூ. 5000 பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டனர்.
பரவாயில்லையே ரொம்ப நியாயமாக இருக்கிறார்களே என்று நினைத்த மேலும் பலரும் அந்த மோசடிக் கும்பலிடம் கடன் கோரி விண்ணப்பித்து பணத்தைக்க ட்டியுள்ளது.
இந்த நிலையில் விண்ணப்பித்துப் பணம் கட்டியவர்களுக்கு அதற்கான வட்டித் தொகை 2 நாட்களுக்கு முன்பு கிடைக்கும் எனக் கூறியிருந்தார் சீதாலட்சுமி.
இதையடுத்து வீட்டின் முன்பு மக்கள் குவிந்தனர். ஆனால் சீதாலட்சுமி ஏதோ காரணங்களைக் கூறி மழுப்பியுள்ளார். மேலும், அவர், சிவசண்முகம், செந்தில்குமார், அனு ஆகியோர் தப்ப முயன்றுள்ளனர்.
உஷாரான பொதுமக்கள் நால்வரையும் பிடித்து டிபி சத்திரம் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட வேலு - சரளாவை தேடி வருகின்றனர்.
இந்த பலே ஜோடிகள் ஏழை எளிய மக்களிடம் பல கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.