பூந்தமல்லி அருகே மரம் விழுந்து தாய் - மகன் பலி
சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் பலத்த மழையுடன் காற்று வீசியதில் மரம் குடிசையில் விழுந்ததில் தாயும், மகனும் பலியானார்கள்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினசரி மாலை நேரங்களில் லேசான மழை உள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம், கடலூர், ஏற்காடு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 60 மிமீ மழை பெய்துள்ளது.
புவனகிரி, வானமாதேவி, ஈரோடு 40 மிமீ, சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், திருக்கோவிலூர், விழுப்புரம் 30 மிமீ, ஆர்.கே.பேட்டை, தொழுதூர், விருதாசலம், சங்கராபுரம், ஆரணி, பெருந்துறை 20 மிமீ, ஸ்ரீபெரும்புதூர், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சோத்துப்பாறை, தேக்கடி, உளுந்தூர்பேட்டை, செய்யார், ஓமலூர், வால்பாறை, குன்னூர், மதுரைஆகிய இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காணப்பட்ட வெயிலின் கடுமை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 96.8 டிகிரி வெயில் அடித்தது. ஆனால் மாலைக்கு மேல் இரவு வரை விட்டு விட்டு லேசான மழை பெய்தபடி இருந்தது.
இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டமாக உள்ளது. இதை நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பூந்தமல்லி அருகே பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்ததில் குடிசை வீட்டின் மீது மரம் விழுந்தது. அதில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெரு பொன்நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி அமுலு (32). இவர்களது மகன்கள் ஜெப்ரிஷ் (9), விஷ்வா (5).
ஜெயபால் குடிசை வீட்டில் வசித்தார். இவரது வீட்டு அருகே 200 வருடங்கள் பழமையான அரச மரம் ஒன்று நின்றது. இன்று அதிகாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அரச மரம் வேரோடு சாய்ந்து ஜெயபால் குடிசை வீட்டு மீது விழுந்தது. இதில் குடிசை இடிந்து விழுந்தது.
மரக்கிளையின் அடியில் அமுலு, ஜெப்ரிஷ் இருவரும் சிக்கிக் கொண்டனர். பலத்த காயத்துடன் மூச்சு திணறி இருவரும் உயிரிழந்தனர்.
ஜெயபால் தனது குழந்தை விஷ்வாவை தூக்கிக் கொண்டு சிரமப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினார்.