திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி
திருப்பத்தூர் (சிவகங்கை): சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐவர் உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 9 பேர் காரில் சபரிமலைக்கு கிளம்பினர். காரை டிரைவர் சென்னை புழல் பகுதியை சேர்ந்த மதியழகன் ஓட்டிவந்தார். நேற்று முன் தினம் இரவு அவர்கள் பிள்ளையார்பட்டிக்கு வந்தனர். இரவு அங்கேயே தங்கிவிட்டு, நேற்று அதிகாலையில் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, சபரிமலைக்கு புறப்பட்டனர். திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடிப்பட்டி விலக்கில் வந்தபோது, திருப்பத்தூரில் இருந்து நெல்மூடை ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு, நேர் கார் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் புழல் மோகன் (35), தங்கச்சாமி (50) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். வியாசர்பாடியை சேர்ந்த சசிக்குமார் (15), செங்குன்றம் லாரன்ஸ் (வயது 30), வியாசர்பாடி கார்த்திகேயன் (16), சென்னை சர்மா நகர் முனியாண்டி(27), அவரது மகள் சிறுமி கீர்த்தனா (6), புழல் செல்வக்குமார் (30), டிரைவர் மதியழகன் (40) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி டிரைவர் அஜ்மீரும் (30) காயம் அடைந்தார். இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த பக்தர்கள் 7 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டியும், டிரைவர் மதியழகனும் இறந்து விட்டனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே இதே விபத்தில் காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமிநாதன் என்பவரும் இறந்தார். அவருடன் வந்த செல்வி என்று சிறுமி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறாள். இவர்களும் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து உள்ளனர்.
இவர்கள் சென்னை அல்ல, திருச்சி திலகர்தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வந்த காரில் இவர்கள் எங்கு ஏறினார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.