2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: விவாதம் நடத்த அதிமுக கோரிக்கை
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அதிமுக கோரிக்கை விடுத்தது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, இப்போது 3-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 70,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஆனால், 2008ம் ஆண்டில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, 2-ஜி ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அதிமுக கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அர்த்தமற்றவை. குற்றம் சுமத்துவதும் அதற்கு பதிலளிப்பதும் அரசியலில் சகஜம்.
முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்படுத்திய விதிமுறைகளின்படிதான் அந்த 2-ஜி ஸ்பெக்டரம் விற்கப்பட்டது.
லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வகுத்து அளித்திருந்தது. இந்த விதிகள்படிதான் தான் ஒதுக்கீடும் நடந்தது.
3-ஜி ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டுதல் முடிவடைந்து ஏல விற்பனை மே 19, 2010ல் தான் முடிவடைந்தது. ஏலம் மூலம் ஒதுக்கீடு பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் ஸ்பெக்டரம் செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஒதுக்கப்படும்.
அதே நேரத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு தனியார் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் முன்பே 3-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
எம்டிஎன்எல் நிறுவனம் டெல்லி, மும்பையிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 463 நகரங்களிலும் 3-ஜி சேவையைத் தொடங்கியுள்ளன. அனைத்து நிறுவனங்களும் 3-ஜி சேவைகளைத் தொடங்கும்போது கட்டணமும் குறையும் என்றார் ராசா.
செல்போன் கோபுரங்கள் கதிர்வீச்சு விவகாரம்:
இந் நிலையில் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுமென்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் ராசா கூறுகையில், செல்போன் கோபுரங்கள் தொலைத் தொடர்பு துறையின் உரிய அனுமதியை பெற்றபின்தான் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பான விதிமுறைகளை மீறியதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை.
இந்த கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நகரசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை அந்த நிறுவனங்கள் பெற வேண்டும்.
சில உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சேவை நிறுவனங்கள் விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. அதைத் தடுப்பதற்காக, சர்வதேச விதிமுறைகளின்படி கோபுரங்களை அமைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.