வாரனாசி குண்டுவெடிப்பு: பட்கால் சகோதரர்கள், டாக்டர் ஷாநவாஸ் முதன்மை குற்றவாளிகள்-உபியில் 3 பேர் கைது
மும்பை: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் நேற்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 2 வயது சிறுமி பலியானார். மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு இந்திய முஜாஹிதீன் தலைவர்களான ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல் சகோதரர்கள் தான் மூலக் காரணம் என்று மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் தற்போது பாகி்ஸ்தானில் இருக்கின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி நடந்த பாட்லா ஹவுஸ் என்கௌன்டரில் கைதான இந்திய முஜாஹிதீனின் முஹம்மது சைஃபின் சகோதரர் டாக்டர் ஷாநவாஸ் தான் இந்த தாக்குதலுக்கு பெரிதும் உதவியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
டெல்லி குண்டுவெடிப்புகள் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு அந்த என்கௌன்டர் நடந்தது. அதில் இந்திய முஜாஹிதீன் கமாண்டர் ஆதிக் அமீன் கொல்லப்பட்டார், சைஃப் கைது செய்யப்பட்டார்.
தற்போது துபாயிலும், பாகிஸ்தானிலுமாக மாறி மாறி வசித்து வரும் டாக்டர் ஷாநவாஸ் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர். அவருக்கும் பட்கல் சகோதரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவருக்கு டெல்லி, அகமதாபாத் மற்றும் ஜெய்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு உண்டு.
இதற்கிடையே இந்த வாரனாசி குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளதாக வாரனாசி போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் நேற்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 2 வயது சிறுமி பலியானார். மேலும் 37 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பை இந்தியன் முஜாகிதீன் தான் நடத்தியது என்று பொறுப்பேற்று மும்பையிலிருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக தந்தை, மகனிடம் உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களது ஏர்-டெல் பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பை தவறாகப் பயன்படுத்தி வேறு யாரோ மெயில் அனுப்பியது உறுதியானதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
வாராணசியில் தினமும் மாலையில் கங்கை ஆரத்தி பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம்போல தசா அஸ்வமேத காட் பகுதியில் பூஜை நடந்தது.
அப்போது அங்கு குண்டு வெடித்தது. இதையடுத்து பக்தர்கள் அலறியடித்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 37 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 வயது சிறுமி சரிதா சர்மா சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் குண்டுக் காயத்தால் இறந்தாரா அல்லது நெரிசலில் சிக்கி இறந்தாரா என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் பிரான்ஸ், இத்தாலியைச் சேர்ந்தவர்கள் உள்டபட 4 வெளிநாட்டினரும் காயமடைந்தனர். படித்துறையின் படிகளில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
வெடிக்காத குண்டு மீட்பு:
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு வெடிக்காத குண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் முஜாகிதீன் பொறுப்பேற்பு-இமெயில்:
இந்த சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடித்த அடுத்த சில நிமிடங்களில் சில மீடியா அலுவலகங்களுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பெயரில் இ-மெயில்கள் வந்தன.
5 பக்கம் கொண்ட அந்தக் கடிதத்தில், குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்களே. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பழிதீர்க்கும் வகையில் இந்த வெடிகுண்டு சம்பவத்தை நடத்தியுள்ளோம். விரைவில் இதுபோன்ற மேலும் தாக்குதல்களை நடத்துவோம்.
குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) கூறியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் பாபர் மசூதி நிலத்தை மூன்றாகப் பிரிக்குமாறு வந்த நீதிமன்றத் தீர்ப்பையும் கண்டிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு கடந்த ஜூன் மாதம் தான் மத்திய அரசு தடை விதித்தது. டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்த அமைப்பினர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்ததால் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஜூன மாதம் விதிக்கப்பட்ட தடைக்குப் பின் நடந்துள்ள முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில தந்தை-மகனிடம் விசாரணை:
இந் நிலையில் இந்த இ-மெயில் நவி மும்பை பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வசிக்கும் தந்தை, மகனை மத்திய உளவுப் பிரிவினரான ஐ.பி பிடித்துச் சென்று விசாரித்தது. ஆனால், விசாரணையில் இந்த மெயிலை அவர்கள் அனுப்பவில்லை என்பதும், அவர்களது ஏர்டெல் இன்டர்நெட் பிராட்பேண்ட் WiFi இணைப்பில் யாரோ ஊடுருவி, அவர்களது இன்டர்நெட் முகவரியிலிருந்து மெயில் அனுப்பியது தெரியவந்துள்ளது.
வாரணாசி விரைந்த ப. சிதம்பரம்:
இந்த சம்வத்தையடுத்து வாராணசியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அங்கு விரைந்துள்ளார். குணடு வெடிப்பு நடந்த இடத்தை நேரில் பார்வையிடும் அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று முன்தினம் உத்தரப் பிரதேசத்தில், குறிப்பாக வாரணாசியில் பாதுகாப்பு தீவிரமாக இருந்த நிலையில், நேற்று இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தள்ளது.
சென்னை, டெல்லி, மும்பையில் பலத்த பாதுகாப்பு:
இந்த குண்டுவெடிப்பையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை, ஹைததராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரேதச தீவிரவாதத் தடுப்புப் படையினர் 3 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.