பாஜக ஆட்சியின்போது கடைப்பிடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கொள்கையை வெளியிடுவோம்-சிபல்
இதுகுறித்து அவர் கூறுகையில், அலைக்கற்றை கொள்கை எப்போது வகுக்கப்பட்டது என்பதை அத்வானியிடம் கேட்க விரும்புகிறேன். காபந்து அரசாக வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோதுதான் வகுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாதா?
முறைகேடுகள் 1999-ம் ஆண்டுதான் தொடங்கின. அவை என்ன என்பது இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக வெளியாகும்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. காங்கிரஸ் விவாதத்துக்குத் தயாராக இல்லை என்று பாஜக கூறுவது தவறான தகவல். நாடாளுமன்றத்தில் விவாதமே செய்யாத போது, காங்கிரஸ் கட்சி எப்படி பதில் அளித்திருக்க முடியும்.
ஊடகங்கள் அனைத்தும் முறைகேடை மட்டுமே பெரிதுபடுத்துகின்றன. ஆனால் எனது அமைச்சகம் செய்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்தவில்லை.
நாட்டில் இப்போது 70 கோடி செல்போன்கள் உள்ளன. இது ஒன்றும் மிகச் சிறிய எண்ணிக்கை அல்ல. செல்போன் கட்டணம் 30 காசு அல்லது 50 காசுகளாக உள்ளன. வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு செல்போன் கட்டணம் குறைவாக இல்லை. 2001-ம் ஆண்டில் செல்போன் பயன்பாடு 3 சதவீதமாக இருந்தது. இது 2005-ல் 9 சதவீதமாகவும், இப்போது 61 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இத்தகைய சாதனைகள் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படவில்லை.
ஊழல்களை மட்டுமே ஊடகங்கள் வெளிப்படுத்தும் நேரத்தில் இத்துறையில் நடைபெறும் மிகப் பெரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் குறிப்பிட முன்வர வேண்டும் என்றார் கபில் சிபல்.