2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையில் நான் நேர்மையானவன் என்பது தெரிய வரும்-அருண் ஷோரி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 2001ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படி விசாரணை நடந்தால் நான் எந்த அளவுக்கு நேர்மையானவன் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார் வாஜ்பாய் அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவரான அருண் ஷோரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விசாரணையின் மூலம் எனது தலைமையில் துறை இயங்கியபோது எந்தத் தவறும் நடக்கவில்லை என்பது புரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேர்மையான ஒருவர் எவ்வாறு நேர்மையான முடிவுகளை எடுத்துள்ளார் என்பது புரிய வரும்.
2001-ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்பு அமைச்சகத்தை ஆ. ராசா மட்டுமே நிர்வகிக்கவில்லை என்பதும் தெரியவரும். 2001-ம் ஆண்டிலிருந்து விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏன் முடிவு எடுத்துள்ளது என்று தெரியவில்லை. ஆனால் எனது வேண்டுகோள் எல்லாம், இந்தப் புதிய உத்தரவு ராசா மீதான விசாரணையைத் தாமதப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் என்றார் ஷோரி.
அருண் ஷோரி 2003 ஜனவரி முதல் 2004 மே வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் அவருக்கு முன்பு அதாவது 2001 முதல் 2003 வரை பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறையை வைத்திருந்தார்.
பாஜக ஆட்சியில் இந்த இருவர் அமைச்சர்களாக இருந்தனர். அதன் பின்னர் அமைந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறைய வைத்திருந்தார். தற்போதைய 2வது ஆட்சியில் ராஜா அமைச்சராக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது இந்த நான்கு பேரின் தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளும், அவர்கள் மேற்கொண்ட நடைமுறைகளும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது. இவற்றை மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரிப்பார்.
1998லிருந்தே விசாரிக்கலாமே-பாஜக:
இதற்கிடையே, 1998ம் ஆண்டு முதல் இந்த விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 1998ம் ஆண்டிலும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
நாங்கள் பொறுப்பேற்ற 1998ம் ஆண்டிலிருந்தே விசாரணை நடத்தினால் கூட அதை நாங்கள் வரவேற்போம். அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் குறித்த சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதை எமது கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால்தான் முழு உண்மையும் அம்பலத்துக்கு வரும் என்றார் அவர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளின் கணவரான ரஞ்சன் பட்டச்சார்யாவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு ரூடி பதிலளிக்கையில், எல்லா அம்சங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கோரிக்கை என்றார்.