ஹீரோவும் ஹோண்டாவும் இனி அவரவர் பாதையில்-26 ஆண்டு பந்தம் முடிந்தது!

வாகனத் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பானின் ஹோண்டா குழுமமும், இந்தியாவின் முஞ்ஜால் குழுமத்தின் ஹீரோ நிறுவனமும் இணைந்து 1984-ம் ஆண்டு உருவாக்கியதுதான் ஹீரோ ஹோண்டா நிறுவனம்.
அன்று முதல் இன்றுவரை உலகின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹோண்டாதான். இந்திய இரு சக்கர வாகனத் துறையில் 48 சதவீதத்தை ஹீரோ ஹோண்டாதான் வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் ஹோண்டாவுக்கு 26 சதவீத பங்குகள் இருந்தன.
26 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நிறுவனங்களும் தனித்தனியாகப் பிரிவதாக முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுவிட்டன. இப்போது ஹோண்டாவின் வசமுள்ள 26 சதவீத பங்குகள் முழுவதையும் முஞ்ஜால் குழுமமே வாங்கிக் கொள்கிறது.
இந்தப் பிரிவினைக்குப் பிறகு ஹீரோ ஹோண்டா தயாரிப்பாக வந்த பிராண்டுகள் அனைத்தும் ஹீரோ நிறுவனத்தின் வசமே இருக்கும். குறிப்பிட்ட காலம் வரை ஹீரோ ஹோண்டா பெயரில் வரும் அந்த வாகனங்கள், பிறகு ஹீரோ மோட்டார் சைக்கிள்களாகி விடும்.
அதேபோல ஹோண்டா நிறுவனம், தேவையான தொழில்நுட்பத்தை 2014 வரை தொடர்ந்து வழங்கும். அதன்பிறகு ஹீரோ நிறுவனம் தனக்கென தனி ஆராய்ச்சிப் பிரிவை உருவாக்கி, சொந்தத் தொழில்நுட்பத்தில் இயங்கவேண்டும்.
ஹோண்டா நிறுவனத்துக்கு ராயல்டி வழங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஹோண்டா தனியாக மோட்டார் சைக்கிள் உற்பத்தியைத் தொடங்கியது போன்றவைதான் இந்த பிரிவினைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications