கடையம் பகுதியில் சிறுகிழங்கு விளைச்சல் அமோகம்: ஆந்திரா, கேரளாவுக்கு விற்பனை
பாவூர்சத்திரம்: கடையம் பகுதியில் இந்த ஆண்டு சிறுகிழங்கு விளைச்சல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் கிழங்குகள் தமிழகத்தின் மற்ற பெரு நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மூலம் பாசனம் பெறும் கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மந்தீயூர், தூப்பாக்குடி, பாப்பான்குளம் மற்றும் பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் மகசூல் எடுக்கப்படும்.
இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைத்துள்ளதால் பாவூர்சத்திரம் சந்தைக்கு தினமும் 1500 முதல் 2 ஆயிரம் மூடைகள் வரை சிறுகிழங்கு வருகிறது. இங்கு இவை தரம் பிரிக்கப்பட்டு ஏலம் மூலம் விற்கப்படுகிறது. முதல் தரம் கிலோ ரூ.15 வரையிலும், சிறிய ரக கிழங்குகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு மகசூல் குறைவால் கிலோ ரூ.20 வரை விற்பனையானது. முன்பு கடையம் பகுதியில் விளையும் சிறுகிழங்குகள் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பாவூர்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வரத்து அதிகரித்துள்ளதால் இங்கிருந்து சிறு கிழங்குகள் தூத்துக்குடி, நாகர்கோவில், ஒட்டன்சத்திரம், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
குறிப்பாக கேரள வியாபாரிகள் இங்கு வந்து அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பாவூர்சத்திரம் சந்தை தினமும் மாலையில் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் பரபரப்பாக காணப்படுகிறது.