தேசிய மனித உரிமை ஆணையர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணனை நீக்கக் கோரி வழக்கு
டெல்லி: தேசிய மனித உரிமை ஆணையர் பதவியிலிருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் பெருமளவில் சொத்துக்கள் குவித்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் புற்றீசல் போல வெடித்துக் கிளம்பி வருகிறது.
இதுகுறித்து இதுவரை பதிலேதும் பேசாமல் மெளனமாக இருக்கிறார் பாலகிருஷ்ணன். இந்த நிலையில் அவரை தேசிய மனித உரிமை ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்தபோது அவரது மகள் சோனி, மருமகன் ஸ்ரீனிஜின் ஆகியோர் வருமானத்திற்கு மீறிய வகையில் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
எனவே பாலகிருஷ்ணனை உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும். அவர் மீது நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும்.
கடந்த 2006ம் ஆண்டு கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீனிஜின் போட்டியிட்டபோது தனது சொத்து மதிப்பு ரூ. 25,000 எனஅறு மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று அவருக்கு பல கோடி சொத்துக்கள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். பாலகிருஷ்ணன் பதவிக்காலத்தின்போதுதான் ஸ்ரீனிஜின் பெருமளவில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும், பாலகிருஷ்ணன் செயல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார்.
மருமகன் காங்.கிலிருந்து விலகினார்:
இதற்கிடையே பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜின் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் மீதான நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இன்னொரு மருமகனும் சிக்குகிறார்:
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் இன்னொரு மருமகனான பென்னியும் சொத்துக் குவிப்புப் புகாருக்குள்ளாகியுள்ளார்.
இவர் பாலகிருஷ்ணனின் 2வது மகள் ராணியின் கணவர். இவரும் பெருமளவில் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
தம்பி லீவில் போனார்:
இதற்கிடையே, சொத்துக் குவிப்புப் புகாரி்ல சிக்கியுள்ள பாலகிருஷ்ணனின் தம்பி பாஸ்கரனை உடனடியாக அட்வகேட் ஜெனரல் பொறுப்பிலிருந்து விலகுமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் விலகவில்லை. மாறாக நீண்ட விடுப்பில் போய் விட்டார்.












Click it and Unblock the Notifications