தாமஸ் நியமன விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி : பி.ஜே.தாமஸ் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த தாமஸ் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்தது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கேரள மாநிலத்தில் மாநில உணவுத்துறை செயலாளராக தாமஸ் பணியாற்றியபோது 1992ம் ஆண்டு நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கினார் தாமஸ். ரூ. 2.8 கோடி ஊழல் வழக்கில் தாமஸ் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தாமஸுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாமஸை காப்பாற்றும் நோக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
இந்த வழக்கு விசாரணயின்போது தாமஸின் வழக்கறிஞர் அவரது நியமனம் குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.