காங்.கை திமுக தூக்கி எறிந்ததற்கு திருமாவளவன் வரவேற்பு
சென்னை: மத்திய அரசிலிருந்து விலகுவதாக திமுக எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளஆர்.
நேற்று இரவு நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸின் அடாவடிப் போக்கைக் கண்டிக்கும் வகையில், மத்திய அரசிலிருந்து விலகுவது என்றம், பிரச்சினைகள் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தருவது என்றும் திமுக முடிவெடுத்தது.
இந்த முடிவு திமுகவினரிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் வட்டாரம், அதிர்ச்சி அடைந்து, பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
இக்கூட்டம் முடிவடைந்ததும், முதல் நபராக திருமாவளவன் அறிவாலயம் விரைந்து முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரிடம் திமுகவின் முடிவை வரவேற்று தனது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இமயமாக உயர்ந்துள்ளார் கருணாநிதி:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு சனிக்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவதென எடுத்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இந்த துணிச்சலான முடிவால் அரசியல் அரங்கில் முதல்வர் கலைஞர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்.
இந்த முடிவு திமுக கூட்டணிக்கு எந்த வகையிலும் நட்டத்தை ஏற்படுத்தாது. கூட்டணி கட்சியின் மனம் நோகாத வகையில் மிகுந்த பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் தாராளமாக விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் நயத்தக்க நாகரிக அணுகுமுறைகளைக் கொண்டவர் கலைஞர்.
அந்த வகையில் தற்போதைய நெருக்கடி நிலையிலும்கூட பிரச்சினைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு நல்குவோம் என கலைஞர் முடிவெடுத்திருப்பது அவரது அரசியல் நாகரிகத்தை உறுதிப்படுத்துகிறது.
2 மடங்கு வீரியம் கிடைத்துள்ளது:
இந்த முடிவால் திமுக தொண்டர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சியினரும் இரு மடங்கு வீரியத்தோடு தேர்தல் பணியாற்றுகின்ற உந்துதலைப் பெற்றுள்ளனர்.
எனவே திமுக எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலல் மகத்தான வெற்றிபெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவோடு இணைந்து செயலாற்றும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெறாமல் போனால் விடுதலைச் சிறுத்தைகள், பாமகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications