பாமகவில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ்
திண்டிவனம்: வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் அதிகமான இளைஞர்கள் போட்டியிடுவார்கள் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. ராமதாஸ் முன்னிலையில் நடந்த நேர்காணலில் இளைஞர் சங்க மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, பொருளாளர் சையது அலி, சமூக முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கோபால் ஆகியோரும் இடம் பெற்றனர்.
விருப்பமனு அளித்தவர்கள் மாவட்டவாரியாக அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
பாமகவில் இதுவரை 6,150 பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப மனு அளிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. பெண்களுக்கு சட்டப்படி 33 சதவீதம் கிடைத்தால்தான் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் வருவார்கள் என நினைக்கிறேன்.
கடந்த ஓராண்டு காலமாக 60 தொகுதிகளை தேர்வு செய்து, கிராமங்களில் களைப்பணியாளர்கள் 'மைக்ரோ பிளானிங்' முறையில் இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் பாமக வேட்பாளர்களில் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பேர் இடம்பெறுவார்கள்.
தொகுதி பங்கீடு முடிந்தவுடன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவேன். கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சென்னை மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்களில் பங்கேற்பேன். தேர்தல் பிரசாரத்தின்போது பாமகவின் கொள்கைகள், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கி பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது போல திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், தேவைப்பட்டால் அதிமுக ஆட்சியின்போது செய்ய தவறியதையும் பேசுவோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் திமுக அரசால் பலன் பெற்றுள்ளனர்.
எனவே எங்கள் கூட்டணிக்கு மக்கள் பெரும் வெற்றி வாய்ப்பை தருவார்கள். தொகுதி உடன்பாடு முடிவடைந்தவுடன் குறைந்தபட்ச செயல் திட்டமாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என்றார்.