காங்கிரஸுக்கு 64 சீட் மட்டுமே, முடியாவிட்டால் அதிலும் நாங்களே போட்டி-மமதா
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்டு தமிழகத்தில் செய்து வந்தைப் போல பந்தா பண்ணி வந்த நிலையில் 64 சீட் மட்டுமே தர முடியும் என இன்று மமதா பானர்ஜி அறிவித்து விட்டார். அத்தோடு நில்லாமல், தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து விட்டார்.
காங்கிரஸ் கட்சி இந்த 64 தொகுதிகளையும் ஏற்க வேண்டும். ஒரு வேளை முடியாது என்று கூறினால் அந்தத் தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் என்றும் அதிரடியாக கூறியுள்ளார் மமதா.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே அடம் பிடித்து வந்தது. பொறுத்துப் பார்த்த மமதா இன்று அதிரடியாக 228 தொகுதிகளுக்கான தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.
தற்போது வெறும் 64 சீட் மட்டுமே உள்ளது. இதை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று மமதா கூறியுள்ளார். அதை ஒருவேளை காங்கிரஸ் ஏற்க முன்வராவிட்டால் கவலைப்பட மாட்டோம். அந்தத் தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் என்றும் மமதா தடாலடியாக கூறி விட்டார்.
மேலும் மமதா கூறுகையில், தேவையில்லாமல் பெரும் கால தாமதம் செய்து விட்டது காங்கிரஸ். அவர்களுக்காக நாங்கள் 18 நாட்கள் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் தங்களது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. எனவேதான் எங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளோம் என்றார் மமதா.