ஃபுகுஷிமா அணு உலைகளை மூடும் ஜப்பான்: பூகம்ப பலி 21 ஆயிரமாக உயர்வு
ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் மின்சார கேபிள் இணைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மின்சாரம் மூலம் உலைக்குள் நீர் செலுத்தும் பணி துவங்கியுள்ளது.
பிற உலைகளுக்கும் விரைவில் மின்சார இணைப்பு கொடுக்கப்படும். புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் எரிபொருட்கள் உள்ள 3வது உலையில் நேற்று அதிகாலை 3.40 மணி வரை 2 ஆயிரத்து 400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4வது உலையை குளிர வைக்க நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் உள்ள குளிரூட்டும் முறைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
குளிரூட்டும் முறைகள் வெற்றியடைந்த பின், பழுதடைந்துள்ள அணு உலைகள் கான்கிரீட் கலவையால் ஒரேயடியாக மூடப்படும் என்று தெரிவித்தார்.
நிலநடு்க்கம் மற்றும் சுனாமியால் 8 ஆயிரத்து 133 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மியாகி மாகாணத்தி்ல் மட்டும் 4 ஆயிரத்து 882 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 272 பேர் காணாமல் போய்விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சிறுவர் சிறுமியர் இடம் மாறியுள்ளதாக அந்நாட்டு சிறுவர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஃபுகுஷிமா மாகாணத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு பால் விற்பனை செய்ய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவரை மற்றும் மொச்சையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.