எங்கள் கூட்டணியில் வைகோ இணைய வேண்டும்-பாஜக
நாகர்கோவில்: பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
யானை இளைத்தால் பக்கத்தில் பூனை வந்து 'ஹவ் ஆர் யூ' என்று கேட்குமாம். அந்த வகையில் வைகோவை தங்கள் கூட்டணிக்கு அழைத்துள்ளது பாஜக.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்தத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது சரியானது அல்ல.
கூட்டணி கட்சியினருக்காக உழைப்பதில் வைகோ திறமையானவர். கூட்டணி கட்சியினரை தனது கட்சிக்காரர்களைப் போல் பாவித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்வார். அவர் எங்களோடு கூட்டணியில் இருந்தவர்.
பழுத்த அரசியல்வாதியான அவர் விரும்பினால் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம். அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் அவரை அன்புடன் வரவேற்க தயாராக இருக்கிறோம். இது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
பாஜக தேர்தல் அறிக்கை வருகிற 25ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை முன்னுறுத்தி உள்ளது. இது மக்கள் எப்போதும் கையேந்தி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
தேர்தலில் மதிமுக பங்கேற்க வேண்டும்-திருமாவளவன்:
இந் நிலையில் சட்டமன்ற தேர்தலில் மதிமுக பங்கேற்கவேண்டும் என்று
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாகவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு மதிமுகவை நெட்டித்தள்ளியது அதிமுகவின் நம்பிக்கைத்துரோகமும் நன்றி உணர்வில்லா பண்புமே ஆகும்.
அதிமுகவுடன் கூட்டணிவைத்துக்கொண்ட ஒவ்வொரு கட்சியுமே இத்தகைய அவமதிப்புக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது என்பது உலகறிந்த உண்மை. கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கும் இத்தகைய நம்பிக்கைத்துரோகத்தை அதிமுக செய்தது. அதிமுகவுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி உறவானது முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கூடா நட்பு என்பதை மதிமுக உணரவேண்டும்.
ஈழம் கூடாது என்பதுடன் புலிகளுக்கு தடை விதிக்கக்காரணம் நான்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கும் ஜெயலலிதா, பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.
தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் இந்த முடிவு வைகோவின் தன்மானத்தைப்பாதுகாக்கும் என்றாலும் கட்சியையும் தொண்டர்களையும் பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே. அதிமுக தலைமை இப்படி பழிவாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக்கொள்ளஇயலாததாக உள்ளது. இந்தநிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
எனவே தொண்டர்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் தேர்தலை மதிமுக சந்திக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும் என்று கூறியுள்ளார் திருமா.