காற்றில் பறந்த தயாநிதி மாறன் வாக்குறுதி: சிபிஎம் குற்றச்சாட்டு
மதுரை: எக்காரணத்திற்காகவும் 55 லட்சம் பேல்களுக்கு மேல் ஒரு கிலோ பஞ்சு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கின்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் அமைச்சர்கள் குழு, மேலும் 10 லட்சம் பேல்கள் பஞ்சை வரும் செப்டம்பர் வரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
இது தமிழகத்திலுள்ள நூல் உற்பத்தி தொழில், கழிவுப் பஞ்சு உபயோகிக்கும் தொழில் மற்றும் ஜவுளித் தொழிலை மிகவும் பாதிக்கும்.
பருத்தி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அதிகப்படியான ஏற்றுமதி உதவியாக இருக்கும் என்ற அமைச்சர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால், பருத்தி பயிர் செய்யும் பெருவாரியான விவசாயிகளுக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதாலும், பஞ்சுப் பொதியை பாதுகாத்திட தேவையான இடம் இல்லாததாலும் அவர்கள் மார்ச் மாதமே அறுவடை செய்த பஞ்சை விற்றுவிட்டனர்.
இந்த நடவடிக்கை ஊக வணிகத்திற்கும், பஞ்சை பதுக்கி விற்பவர்களுக்கும் உதவிடவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே அமைச்சர்கள் குழுவும், விவசாய அமைச்சகமும் பஞ்சு வியாபாரிகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்துள்ளன என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.
ஆறு மாதத்திற்கு முன்பு தான், பஞ்சின் விலை கடுமையாக உயர்ந்ததை கண்டித்து தமிழ்நாட்டில் நூல் உற்பத்தியாளர்களும், கழிவுப்பஞ்சு உபயோகிப்பாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டிற்கு வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் எக்காரணத்திற்காகவும் 55 லட்சம் பேல்களுக்கு மேல் ஒரு கிலோ பஞ்சு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இன்று மத்திய விவசாய அமைச்சகமும், அமைச்சர்கள் குழுவும் இணைந்து ஜவுளித்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டு, அதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளது.
தற்போது எடுத்துள்ள இந்த முடிவு உள்நாட்டில் பஞ்சு கிடைப்பதில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, பஞ்சு விலையை எட்டாத உயரத்திற்கு செல்ல வழி வகுக்கும்.
இதனால் தமிழ்நாட்டில் நூல் உற்பத்தி தொழிலும், கழிவுப் பஞ்சு உபயோகிக்கும் தொழில் மற்றும் ஜவுளித் தொழிலும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.
எனவே, அதிகப்படியாக பஞ்சு ஏற்றுமதி செய்ய கொடுத்துள்ள அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.