'ஷூ' வீசியவரை விடுதலை செய்யுங்கள்: கேஜ்ரிவால் 'காந்தி' வேண்டுகோள்!
டெல்லி: தன் மீது ஷூ வீசியவரை விடுதலை செய்யுமாறு அன்னா குழு உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்னா ஹஸாரேவின் குழுவில் உள்ளவர் சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால். நேற்று அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பொதுக் கூட்டத்தில் பேச வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஜிதேந்தர் பதக் என்பவர் அர்விந்த் மீது ஷூ வீசினார். அவரை தாக்கவும் முயன்றார். ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஜிதேந்தரைப் பிடித்து அடித்து நொறுக்கினர். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அன்னா குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார். அடுத்த நாளே உயர் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அன்னா ஹஸாரே பிரசாரம் செய்ததையடுத்து அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ஜேக்ரிவால் தாக்கப்பட்டார்.
இது குறித்து கேஜ்ரிவால் கூறியதாவது, என் மீது ஷூ வீசியவரை போலீசார் விடுதலை செய்ய வேண்டும். அவர் ஷூ வீசினால் அவரை அழைத்து அமைதி்யாகப் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு அவரை தாக்கக் கூடாது. தாக்குதல்கள் நடக்கும் என்பதால் நாம் தான் தயாராக இருக்க வேண்டும். நம்மை அவமதிப்பவர்களை நாம் தான் சகித்துக்கொள்ள வேண்டும்.
எந்த அரசியல் சதியிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். நம் நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க இது ஒரு பொன்னான நேரம் என்றார்.
ஜிதேந்தரின் உறவினர் கைலாஷ் பதக் கூறியதாவது, ஜிதேந்தர் செய்தது தவறு. அவர் எனது நெருங்கிய உறவினர். ஆனால் எங்களுடன் கிராமத்தில் தங்கவில்லை. எங்களுக்கும், அவருக்கும் தொடர்பில்லை. அவர் எந்த கட்சிக்கு, எந்த தலைவருக்காக உழைக்கிறார் என்றும் தெரியவில்லை. முன்பு பாஜக தலைவர் ராம்பிரகாஷ் திருப்பதியிடம் வேலை பார்த்தார். அவர் அன்னா குழு உறுப்பினரைத் தாக்கியது தவறு என்றார்.
ஊழலைப் பற்றி பேச வந்துவிட்டு அதைப் பற்றி அவர் எதுவும் கூறாததால் தான் அவரைத் தாக்கினேன் என்று ஜிதேந்தர் தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால் கூறியதாவது, நாங்கள் ஒன்றும் காங்கிரஸை முழுவதுமாக எதிர்க்கவில்லை. அவர்கள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியும் ஒரு ஊழல்வாதியே என்றார்.
ஹசாரேவின் பாதுகாப்பு-ஆய்வு செய்யும் மகாராஷ்டிர அரசு:
இந் நிலையில் ஹசாரேவுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு போதுமானதா என்பதை மகாராஷ்டிர அரசு ஆய்வுசெய்ய உள்ளது.
ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷண் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது அறையிலேயே 3 பகத்சிங் கிராந்தி சேனா இளைஞர்களால் தாக்கப்பட்டார். அதற்கு மறுநாள் அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பகத் சிங் கிராந்தி சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டனர்.
நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீது செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து மகாராஷ்டிர அரசு ஆய்வு செய்ய உள்ளது.