சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர்-ரூ. 1650 கோடியில் அதிரடி திட்டம்!
இதன் மூலம் மைசூர் நகரம் முழுமையும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஜொலிக்கப் போகிறது.
மிகப்பிரம்மாண்டமான அரண்மனையும், கோவில்களும் நிறைந்த நகரம் மைசூர். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்நகரின் மின்தேவையை கருத்தில் கொண்டு மைசூர் மாநகராட்சி, மரபு சார எரிசக்தி துறையும் இணைந்து சூரிய சக்தி மின் திட்டத்தை அமல் படுத்த உள்ளது. 1650 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இன்னும் 5 ஆண்டுகளில் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மைசூர் நகரின் அனைத்து தெருக்களுமே சூரிய மின்விளக்குகளால் ஒளிரும் என்று அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
31 நகரங்களில் தொடக்கம்
இதற்கான சிறப்புக் கூட்டம் மைசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மரபுசாரா எரிசக்திதுறை அமைச்சகத்தின் இயக்குநர் திரிபதி, மத்திய அரசு சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நாடுமுழுவதும் 31 நகரங்களில் அமல் படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கூறிய அவர் நகரமயமாக்குதலின் மூலம் எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே பசுமை கட்டடங்கள் கட்டவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் மைசூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
சூரிய ஒளி நகரம்
மைசூரில் ஏற்கனவே சாமுண்டி மலை, மைசூர் அரண்மனை, பல்கலைக்கழக வளாகம். சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் 10 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்கப்பட்டால் மரபு சாரா எரிசக்தி துறை உற்பத்தியில் மைசூர் நகரம் தன்னிரைவு பெறும். மைசூர் இன்னும் 5 ஆண்டுகளில் சோலார் நகரம் என்று அழைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
மைசூரைப் போலவே மற்ற நகரங்களையும் படிப்படியாக சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாற்றி விட்டால் அணு மின்சாரம் போன்ற மக்கள் அஞ்சும் மின் தயாரிப்புக்கும் குட்பை சொல்லலாம்.