திருப்பூர் மாவட்டத்தி்ல் அடுத்தடுத்து 7 முறை லேசான நிலநடுக்கம்-10 கிராம மக்கள் பீதி
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 10 கிராமங்களில் அடுத்தடுத்து லேசான நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீட்டிற்குள்ளே இருக்க அச்சமடைந்த மக்கள் வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள மூலனூர் ஒரத்துப்பாளையம், கனக்கம்பட்டி, கன்னிவாடி, புதுப்பை, எரசினம்பாளையம், மூலப்பாளையம் உள்பட 10 கிராமங்களில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தொடர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஏழுமுறை
செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில் ஏற்பட்ட நில அதிர்வு சுமார் 5 வினாடி நீடித்தது. பின்னர் இரவு 11 மணி முதல் தொடர்ந்து 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உருண்டன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டுக்குள்ளிருந்து அலறி அடித்துக்கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். தொடர் நில அதிர்வினால் சீலம்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டின் மண்சுவர் சரிந்து விழுந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் பத்து கிராமங்களிலும் மீண்டும் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மணலூர், ஒரத்துப்பாளையம் பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இந்தோனேஷிய பூகம்பத்தின் தாக்கம்
நில அதிர்வு குறித்து தகவல் அறிந்ததும் தாராபுரம் ஆர்.டி.ஓ அழகுமீனா, வட்டாச்சியர் சுவாமியப்பன், மற்றும் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. செவ்வாய்க்கிழமை இந்தோனேசியால் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கம், தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலனூர்,காங்கேயம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏற்கனவே 5 முறை இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி பொதுமக்கள் தெரிவித்த புகாரின்பேரில், அந்த பகுதியில் இருந்த கல்குவாரிகளில் வெடி வைப்பது சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கல்குவாரிகளை மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் நிலநடுக்க ஆய்வுமையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இது லேசான நில நடுக்கம் என்பதால் பொது மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு திருச்சி, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் தொடர் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.