புள்ளிவிபரத்தால் ஏழை மக்களை திருப்தி படுத்த முடியாது- சுஷ்மா தாக்கு
டெல்லி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் மக்களவையில் குற்றம் சாட்டினார். இந்த பிரச்சினையில் இடது சாரி கட்சியினரும் மத்திய அரசை விமர்சித்தனர்.
வியாழக்கிழமையன்று கடும் அமளியினால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மதியம் தொடங்கியது. அப்போது விலைவாசி உயர்வு குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக எம்பி சுஸ்மா சுவராஜ்,
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்திற்கு புள்ளிவிபரம் மூலம் பதில் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறது அரசு. விலை உயர்வுக்கு நுகர்வோர் அதிகரித்துள்ளது என்பது ஏற்க கூடியது அல்ல. இது நொண்டிச்சாக்கு என்றார்.
மேலும் மத்திய அரசு சாதாரண மக்களை மறந்து செயல்படுகிறது என்று கூறிய அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றார்.
தொழிலாளர்கள் தற்கொலை
இந்திய பொருளாதார கொள்கையினால் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அன்னிய முதலீடு திட்டம் கொண்டு வந்தால் மேலும் பாதிப்பு வலுப்பெறும். ஹார்வர்டு பல்கலை.,யில் படித்தவர்கள் கூட இந்திய பொருளாதார கொள்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 72 நாட்களில் மகாராஷ்ட்டிராவில் 13 மில் தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பினார்.
இடது சாரிகள் கட்சி சார்பில் பேசிய குருதாஸ் குப்தாவும் மத்திய அரசை கடுமையாக சாடினார்.
தவறான சித்தரிப்பு
எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய பிரணாப் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீது தவறான குற்றம் சுமத்தப்படுகிறது என்றார். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளன. பல கட்டங்களாக பண வீக்கம் குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.
எப்டிஐக்கு அனுமதி நிறுத்தம்
இதனிடையே சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவை ஒத்திவைப்பதாக இதுபற்றி மத்திய நிதிமந்திரியும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் முறைப்படி அறிவித்துள்ளார்.
கைவிடப்படவில்லை
முன்னதாக காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, அன்னிய முதலீட்டை அனுமதிக்க எடுத்த முடிவை நிறுத்தி வைக்காமல், அதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டால் அரசாங்கத்துக்கு சிக்கல் வந்து இருக்கும் என்றார். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை நிறுத்தி வைக்கா விட்டால், பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்து இருந்தன. ஒத்தி வைப்பு தீர்மானமும் ஒன்றுதான், நம்பிக்கை இல்லா தீர்மானமும் ஒன்றுதான் என்று கூறினார்.
இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதே தவிர, கைவிடப்பட வில்லை. அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்டி, அதை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.