நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்- சசி நீக்கத்துக்குப் பின் முதன்முறை
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உட்பட கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை செயற் குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முறையாக இக் கூட்டங்கள் நடக்கின்றன. ஜெயலலிதாவுக்கு மிக ராசியான சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் இக் கூட்டங்கள் நடக்கின்றன.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
கடந்த 19ம் தேதி சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.