இந்திய வரைபடத்தில் தவறு நேர்ந்தது உண்மைதான்: அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: அமெரிக்க வெப்சைட்டில் இந்தியாவின் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. பூகோளரீதியாக தவறான படம் வெளியிடப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து சரியான வரைபடத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. மேலும் தவறான வரைபடம் வெளியிட்டதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது
அமெரிக்கா அரசின் வெளியுறவுத்துறை இணையதளத்தில் அனைத்து நாடுகளுக்கான எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் எல்லையை குறிக்கும் வரைபடத்தில் தவறுதலாக பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி நீக்கப்பட்டு அவை பாகிஸ்தானுடன் இணைந்திருப்பதாக வெளியிடப்பட்டது. அதே சமயம் பாகிஸ்தான் நாட்டின் வரைபடத்தில் காஷ்மீர் பகுதி இணைந்திருப்பதை போன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை நீக்கவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தவறான வரைபடம் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது திருத்தப்பட்ட இந்தியாவின் புதிய வரைபடம் அந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலான்ட் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய நாட்டின் சரியான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க இணையதளத்திலும், பயணம் தொடர்பான அனைத்து தகவல் மையங்களுக்கும் சரி செய்யப்பட்ட வரைபடம் அனுப்ப்ப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா எப்பொழுதுமே அமைதியை மட்டுமே விரும்புவதாக கூறிய அவர், தவறினை உடனடியாக திருத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். 1972 ம் ஆண்டு நடைமுறையில் இருந்த இந்திய வரைபடத்தினை அடிப்படையாக கொண்டே பழைய வரைபடம் வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இந்தியாவின் ஆட்சேபத்தை அடுத்து உடனடியாக சரியான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா கூறியுள்ளார்.