பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு பணி 3 மாதங்களில் தொடங்கும் - வேலாயுதன் நாயர்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவின் புதிய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ரூ.பல கோடி மதிப்புள்ள இந்த பொக்கிஷங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.
இந்த நிலையில் கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் ஐவர் குழுவின் புதிய தலைவராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது. அவர் தலைமையிலான குழு வரும் 3 மாதங்களில் மதிப்பீடு பணிகளை தொடங்க உள்ளதாக வேலாயுதன் நாயர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து என்.வேலாயுதன் நாயர் கூறியதாவது,
பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பீட்டு பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும். இதற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் நடந்து வருகின்றது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்நுட்ப குறைபாடுகளால் மதிப்பீடு குழுவால் செயல்பட முடியாமல் இருந்தது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தேவையான உபகரணங்கள் பெற்ற பிறகு பணிகள் 3 மாதங்களில் தொடங்கும். மதிப்பீடு பணியின் போது பொக்கிஷங்களுக்கு சேதமடையாத வகையி்ல் நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச பொருட்காட்சியம் சங்கத்தின் சட்டத் திட்டங்கள் பின்பற்றப்பட உள்ளது, என்றார்.