தாஜ்மஹாலை விட்டு பிரிய மனம்வரக் கூடாத வகையில் உ.பி. அரசு சிறப்பு திட்டங்களை உருவாக்க முடிவு!
உத்தரப்பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அழகுபடுத்தவும் கூடுதல் வசதிகல் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு பூங்கா அமைக்கும் திட்டத்துக்கான உத்தரவை முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் தலைமையிலான கூட்டம் விவாதித்தது.
இதில் யமுனை நதியை நிர்வகிப்பது, அங்கு பறவைகள் சரணாலயம் போல உருவாக்குவது போன்றவற்றுக்கான திட்டங்கள் குறித்து அறிக்கைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்ச்சை எழாத வகையில் உரிய ஒப்புதல்களைப் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்தாஜ் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்து அதில் நடை பயிற்சி, ஒட்டக சவாரி வசதிகளும், யமுனை நதியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இரவு நேரங்களில் சைக்கிளில் தாஜ்மகாலையும், அதன் அருகில் உள்ள அழகிய அமைப்புகளையும் கண்டுகளிக்க வசதியாக 8 கி.மீ. தூர மார்பிள் கல்லிலான சாலை அமைக்கப்படுகிறது.
ஆட்சி மாறும்போது தாஜ்மஹாலைச் சுற்றி பல்வேறு காட்சிகள் நடந்தேறுவது உத்தரப்பிரதேச அரசியல் வாடிக்கையான ஒன்றே.