சென்னையில் கடல் கொந்தளிப்பு- ராட்சத அலைகள் - மக்கள் பீதி
சென்னை: சென்னையில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் வீசுவதால் மணல் பகுதிக்கு கடல் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மெரீனா, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இதனால் மணல் பகுதிக்கும் கடல் நீர் வந்துள்ளது.
இதனால் கடற்கரைக்கு வந்தவர்கள் பீதியடைந்தனர். பலர் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். மீனவர்களும் கடலுக்குள் போகவில்லை. கடலுக்குப் போன மீனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலையுடன் உள்ளனர்.
சென்னை முழுவதும் பலத்த காற்றும் வீசி வருகிறது. ஆளையே அடித்துத் தள்ளும் அளவுக்கு காற்று வீசுகிறது. சில இடங்களில் சாரல் மழை போல மழைத் தூறல் காணப்பட்டது.