சிறையில் ஜெகனை சந்திக்க சங்கமா மேற்கொண்ட முயற்சி தோல்வி
ஹைதராபாத்: சிறையில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஹைதராபத்தில் ஜெகனை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்குமாறு சங்மா வேண்டுகோள் விடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காக இன்று காலை 10 மணி முதல் சிறை நிர்வாகத்துடன் தீவிர முயற்சிகளை சங்மா மேற்கொண்டார்.
ஆனால் அரசியல் காரணங்களுக்கான நடைபெறும் இந்த சந்திப்புக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. வெறுத்துப் போன சங்மா, ஜெகனின் தாயார் விஜயாம்மாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஜெகன் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்கு சங்மா வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வாக்களிக்க வேண்டும் என்றும் விஜயாம்மாவிடம் சங்மா கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மைசூரா ரெட்டி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சியின் அரசியல் விவகாரக் குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவையே ஜெகன் கட்சி ஆதரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றே கூறப்படுகிறது.