கூடங்குளத்தில் நாளை முற்றுகை போராட்டம்: 10,000 போலீசார் குவிப்பு- பதட்டம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை நாளை முற்றுகையிடப் போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்ததையடுத்து அங்கு 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிரிப்பு தெரிவித்து நாளை அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10,000 போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வஜ்ரா வாகனங்களும், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி, கூடுதல் எஸ்பி மகேந்திரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளனர். கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களுக்கு பஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் கடல் வழியாக படகு மூலம் இடிந்தகரை வந்த வண்ணம் உள்ளனர்.
போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கையாள போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்பதில் போலீசார் முனைப்பாக உள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் அத்துமீறினால் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆயிரக் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கூடங்குளத்தில் பதட்டம் நிலவுகிறது.