ஜெமினி பாலத்தில் பஸ்சை கவிழ்த்த டிரைவர் 'டிஸ்மிஸ்'!
சென்னை: சென்னையில் ஜெமினி பாலத்தில் மாநகர பஸ் கவிழ காரணமாக இருந்த மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 27ம் தேதி சென்னை ஜெமினி பாலத்தில் மாநகர பஸ் தடுப்பு சுவரை இடித்து தள்ளி கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அதிஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை.
இந்த நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளும், பாண்டி பஜார் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். விபத்து நடந்து போது ஓட்டுநரின் இருக்கை கழன்றதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் மீது முதற்கட்ட நடவடிக்கையாக, பணியில் இருந்து காலவரையின்றி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அதன்பிறகு அவரை மீண்டும் பணியில் சேருமாறு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் விபத்து குறித்து விசாரணை முடியும் வரை பணியில் மீண்டும் சேர கூடாது என்று உயரதிகாரிகள் கூறினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் லைசென்ஸ், பாண்டிபஜார் போலீசாரிடம் இருந்தது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை லைசென்ஸ் தர முடியாது என்று போலீசார் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் ஓட்டுநர் பிரகாஷ் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதம் தபால் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று துறை ரீதியான விசாரணையில் தெரிய வந்தது.