நாகர்கோவிலில் ஆற்றில் குளிக்க சென்ற 4 என்ஜினியரிங் மாணவர்கள் மூழ்கி பலி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினியரிங் மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தை சேர்ந்த மாதவன்பிள்ளை. இவரது மகன் நிஷாந்த்(21). சென்னையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறைக்காக நிஷாந்த் ஊருக்கு வந்த போது, தனது நண்பர்களை சந்தித்தார்.
நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்த முத்துக்குமார் மகன் சரவணன்(21). இவர் நாகர்கோவில் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த வில்பிரட் மகன் லெனாய் வின்சென்ட்(21) கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருடன் சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் முல்லை அரசு(21) என்ற மாணவரும் படித்து வந்தார்.
பழைய நண்பர்களை சந்தித்த நிஷாந்த் அவர்களுடன், நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆரல்வாய்மொழி வீரநாராயணமங்கலம் பாலம் அருகில் உள்ள பழையாறுக்கு சென்ற 4 பேரும் குளித்தனர்.
அங்குள்ள ஒரு பாறையின் பின்புறம் 4 பேரும் சேர்ந்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பாறையின் மீது சிலர் அமர்ந்து கொண்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் குளித்து கொண்டிருந்த 4 பேரும் திடீரென மாயமாகினர்.
ஆனால் 4 பேரின் உடைகள், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அப்படியே இருந்தது. இதையடுத்து மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள், 4 பேரின் உடைகளில் இருந்த செல்போன் மூலம் அதில் இருந்த நம்பர்களுக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் மீட்பு வாகனத்தில் இருந்த விளக்குகளை பயன்படுத்தி சுமார் 2 மணிநேரம் போராடி, 4 பேரின் உடல்களையும் மீட்டனர். இறந்த 4 என்ஜினியர் மாணவர்களின் உடல்களை பார்த்த உறவினர் கதறி அழுதனர்.