இந்திய நிறுவனத்தின் விமான நிலைய காண்ட்ராக்ட்டை அதிரடியாக ரத்து செய்த மாலத்தீவுகள்!
மாலத்தீவுகள் நாட்டின் தலைநகரான மாலேவில் உள்ள அப்துல் நசீர் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மாலத்தீவுகளில் ஆட்சியில் இருந்த அதிபர் நசீத் காலத்தில் இந்தப் பணி ஜிஎம்ஆருக்கு ஒதுக்கப்பட்டது.
டெல்லி, ஹைதராபாத்தில் மாபெரும் விமான நிலையங்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், மாலத்தீவுகளில் அதிபர் முகம்மத் வகீத் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து முன்னாள் அதிபர் நசீத் ஆட்சியில் தரப்பட்ட இந்த காண்ட்ராக்டை அந்த நாடு ரத்து செய்துள்ளது. ஏற்கனவே, இந்தத் திட்டத்துக்காக மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் அந்த நாட்டின் புதிய அரசு புகார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் புகாருக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இரு வாரங்களுக்கு முன் இந்தியாவிடம் வகீத் அரசு மன்னிப்பு கோரியது. இந் நிலையில், இந்த காண்ட்ராக்ட்டையே ரத்து செய்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாலத்தீவு அரசு. இது இந்தியாவுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் இந்தியாவின் செல்வாக்குக்கே இந்த நடவடிக்கை சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு குட்டி நாடான மாலத்தீவு கூட இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
மாலத்தீவின் இந்தச் செயலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இந்தச் செயல் அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் பின்னடைவு என்று இந்தியா கூறியுள்ளது.
அதே போல மாலத்தீவு அரசின் இந்த செயல் சட்ட விரோதமானது என்றும், இதை எதிர்த்து சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஜிஎம்ஆர் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஜிஎம்ஆர் நிறுவனம் மீது தாங்களும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக மாலத்தீவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்திய முதலீடுகள், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை மாலத்தீவுக்கு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.