ஆள்கடத்தல், நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சேர்க்கக் கோரி வழக்கு

கரூர் பெரியகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தெய்வானை தம்பதியரின் வளர்ப்பு மகன் கோகுல்(25). அவர் கோவையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வருகின்றார். அவரது குடும்பத்தினருக்கு கரூர்-சேலம் பைபாஸ் சாலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கோகுல் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், 2011ம் ஆண்டு ஜூன் 3 ம் தேதி கோவையில் இருந்து நான் எனது பைக்கில் புறப்பட்டபோது நடராஜன் உள்ளிட்ட சிலர் என்னை கடத்திச் சென்று கரூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, சொத்துகளை அவர்களுடைய பெயர்களுக்கு மாற்றிக் கொண்டனர். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்கும் உடந்தையாக இருந்தனர்.
மேலும், என்னிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஸிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜனவரி 5ம் தேதி கரூர் ஜே.எம் 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் மூடிய நீதிமன்றத்தில், கோகுல் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோரையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி கரூர் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி கோகுல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமநாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேற்று நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications