நீ என் மகளா... இப்படி ஒரு கேள்வியை எந்த அம்மாவும் கேட்கக் கூடாது!
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. கடந்த 7 வருடங்களாக இந்த கொடுமையான ஞாபகமறதி நோயுடன் அவர் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது பெயர் ஷான்டா ரஷ். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருநாள் காலையில் அவர் விழித்தெழுந்தபோது அவருக்கு மனசெல்லாம் 'பிளாங்க்' ஆக இருந்தது. தான் யார், தான் எங்கிருக்கிறோம், தன்னுடன் உள்ளவர்கள் யார் என்பது அவருக்கு நினைவில்லை. அத்தனை பேரும் அந்நியமாக தெரிந்துள்ளனர். அவருக்குப் பெரும் குழப்பமாகி விட்டது. அந்த நாளுக்கு முந்தைய 30 வருட வாழ்க்கையும், அதன் நிகழ்வுகளும் அவரை விட்டுப் போய் விட்டன. எல்லாமே துடைத்துப் போட்டது போல இருந்தது.
அவருக்கு வந்திருப்பது 'போட் அம்னீஷியா' என்ற ஞாபக மறதி நோயாகும். தனது குழந்தை யார், தனது கணவர் யார் என்பது கூட அவருக்கு நினைவில்லை.
மேலும் ஒருவருடன் எப்படிப் பேசுவது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. எப்படிப் பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு மாறி விட்டார் ரஷ். அவருக்கு தற்போது இதுபோன்ற அடிப்படை விஷயங்களை அவருக்கு சொல்லிக் கொடுப்பது பேஸ்புக், டிவி, வீடியோ போன்றவைதான்.
தனது மகளையு்ம், கணவரையும் கூட அவரால் அடையாளம் காண முடியாமல் போனதுதான் சோகத்திலும் பெரிய சோகம். நீங்க யார், எனக்கு என்ன உறவு முறை வரும் என்று தனது கணவரிடம் கேட்டபோது அவர்துடித்துப் போய் விட்டாராம்.
ரஷ்ஷுக்கு ஞாபக மறதி நோய் வந்தபோது அவரது குழந்தை ஷாலீனுக்கு ஒன்றரை வயதேயாகும். தனது தாயார் தன்னிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதை அப்போதே உணர்ந்துள்ளார் ஷாலீன். ஷாலீன் வளர வளர தனது தாயார் மாறி விடுவார் என நம்பியுள்ளார். ஆனால் இப்போது வரை தன்னை தனது தாயாருக்கு அடையாளம் தெரியாமலேயே இருப்பது அவரை வேதனைப்படுத்தியுள்ளதாம்.
ஷாலீனுக்கு 4 வயதாக இருக்கும்போதுதான் தனது தாய்க்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து அவருக்குத் தெரிய வந்ததாம். தற்போது தனது மகளின் பாடப் புத்தகங்களை ரஷ்ஷும் படிக்கிறாராம். குறிப்பாக கணக்குப் புத்தகத்தை படித்து அடிப்படைகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறாராம்.
ஒரு மனிதனுக்கு நினைவுகள் எவ்வளவு முக்கியமானவை பாருங்கள்... நினைவுகள் நம்மை விட்டு நீங்கி விட்டால் நாம் நடைப்பிணம்தான் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தை....!