காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல்: கல்மாடி மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ரூ90 கோடிக்கு ஊழல் செய்த வழக்கில் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட 10 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபப்ட்டன.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ரூ90 கோடிக்கு அரங்கம் அமைத்தது, விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியது உட்பட பல ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றது என்பது புகார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று கடந்த மாதம் 10-ந் தேதி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கல்மாடி உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் நீதிபதி ரவீந்தர் கெளர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120 பி (கூட்டுசதி), 420 (ஏமாற்றுதல்), 201 (சாட்சியங்களை அழித்தல்) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்ற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.