மதுரையில் நக்சல்களால் கடத்தப்பட்டவர் மானாமதுரையில் மீட்பு.... நால்வர் கைது!
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 40. இவர் கள்ளநோட்டு மாற்றும் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மாலை 5 மணிக்கு நின்று கொண்டிருந்த போது அப்போது அங்கு ஃபோர்டு ஐகான் காரில் வந்த கும்பல் ராஜேந்திரனை கடத்தியது. தகவலறிந்த மதுரை போலீசார், அந்த கும்பலை விரட்டியுள்ளனர்.
அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பச்சோரி கிராமத்தின் அருகே வரும்போது டி.எஸ்.பி. வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார், காரை மறித்துள்ளனர். அப்போது போலீசார் மீது, அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் போலீசார் மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நக்சல்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. நக்சலைட் சத்தியமூர்த்தி தலைமையில் சரவணன், பிரபாகரன், மகாராஜன், குமார் ஆகியோர் ராஜேந்திரனை கடத்தியுள்ளனர். இதில் சத்திய மூர்த்தி தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கும், கடத்தல் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் பின்னர் திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் அடைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை மதுரை எஸ்.பி, சிவகங்கை எஸ்.பி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
திருநகரில் கடத்தப்பட்ட நகர் மானாமதுரை அருகே மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.