விமானி அறையில் திடீரென பரவிய நச்சுவாயு! அவசரமாக தரை இறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையில் நச்சுவாயு பரவுவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இரண்டு விமானிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் 158 பயணிகளுடன் ஹீத்ருவில் இருந்து பிலடெல்பியா நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 777 விமானம் கடந்த ஞாயிறன்று இயக்கப்பட்டது. எட்டு மணி நேரம் விமானம் பயணித்த நிலையில் நடுவானில் திடீரென விமானிக்கு கண் எரிச்சல், தொண்டை அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் விமானியின் அறையில் இருந்த துணை விமானிக்கும் இதே போன்ற எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து விமானத்தை தரை இறக்க முயற்சித்தனர்.
அப்போது விமானம் கனடாவின் கூஸ்பே ராணுவ விமான தளத்துக்கு மேலாக பறந்து சென்றது. இதையடுத்து அந்த விமான தளத்தை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறி உதவி கேட்டிருக்கின்றனர். பின்னர் அனுமதி கிடைத்தவுடன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக பயணிகளுக்கு தெரிவித்துவிட்டு கூஸ்பேயில் தரை இறக்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ். பின்னர் 10 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் நச்சுவாயுவை உணர்ந்ததால் கனடாவில் விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.