கர்நாடக லிங்காயத்து மடத்திற்கு நித்தியானந்தா குறி? - கடும் எதிர்ப்பு, போராட்டம்!
தனக்கென ஒரு தனி மடம் அமைத்து டிவிகளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்ததாக வீடியோவில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானார். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் பாய்ந்தன. நித்தியானந்தா கர்நாடகாவிலிருந்து தப்பி ஓடினார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்து நடமாடிக் கொண்டிருக்கிறார்.
இடையில் மதுரை ஆதீனத்தின் நட்பைப் பெற்று மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக அறிவிக்கச் செய்து அனைவரையும் அதிர வைத்தார். ஆனால் இந்தப் பதவி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அரசுத் தரப்பிலிருந்து நெருக்கடி வந்ததும், நித்தியானந்தாவை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.
இதையடுத்து தற்போது அமைதி காத்து வரும் நித்தியானந்தா, கர்நாடகத்தில் உள்ள ஒரு லிங்காயத்து சமூகத்தின் மடத்திற்கு மடாதிபதியாக முயற்சிப்பதாக பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டி என்ற இடத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரா மடம். 100 ஆண்டு பழமையான மடம் இது. இந்த மடத்தின் மடாதிபதி பொறுப்புக்கு வர முயற்சிக்கிறார் நித்தியானந்தா என்பதுதான் பரபரப்புச் செய்தியின் சுருக்கம்.
இந்த மடத்தின் மடாதிபதியாக தற்போது சிவயோகி ராஜேந்திர சுவாமிஜி என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் பிடதி ஆசிரமத்திற்குப் போனதாகவும், அங்கு நித்தியானந்தாவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது மகாலிங்கேஸ்வரா மடத்தின் தலைவராக நித்தியானந்தாவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகல்கோட்டில் போராட்டங்கள் வெடித்தன. மடம் உள்ள பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களில் குதித்தனர். நித்தியானந்தாவை மடத்துக்குள்ளும், ஊருக்குள்ளும் விட மாட்டோம் என்று மிரட்டினர்.
அதேபோல லிங்காயாத்து மடாதிபதிகள் பலரும் ராஜேந்திர சுவாமிஜியை போனில் தொடர்பு கொண்டு கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர சுவாமிஜி கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இது வெறும் வதந்தியே. அப்படிப்பட்ட எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. நித்தியானந்தாதான் இதுபோன்ற வதந்தியைப் பரப்புகிறார் என்றார். அதேபோல நித்தியானந்தாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
உண்மை என்னவோ தெரியவில்லை..!