தேர்தல் முடிவைப் பொறுத்து அரசியல் இருந்து சோனியா ஓய்வு? ரேபரேலியில் பிரியங்கா போட்டி?
காங்கிரஸ் கட்சியில் அண்மையில் சோனியாவின் மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டார். சோனியாதான் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும் ராகுல்தான் செயல் தலைவராக இயங்கி வருகிறார். இந்த நிலையில் சோனியாவின் ரேபரேலி தொகுதியை அடிக்கடி அவரது மகள் பிரியங்கா காந்தி பார்வையிட்டு வருகிறார். இதனால் பல யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.
உடல் நிலை மற்றும் கட்சி விவகாரங்களினால் சோனியா காந்தியால் அவரது தொகுதியை சரியாக கவனிக்க முடியவில்லை. அதனால்தான் பிரியங்கா காந்தி அடிக்கடி ரேபரேலியில் முகாமிடுகிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன. ராகுல் காந்தியின் கையில் கட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் வகையில் துணைத் தலைவராக்கிய சோனியா, ரேபரேலி தொகுதியையும் தமது மகளுக்கு தாரை வார்க்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
வரும் லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட சோனியா விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். இதனால் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். இதற்காக ரேபரேலியில் கட்சி தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பூத் அளவிலும் இந்த பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டுவ் அருகிறது. இந்த பயிற்சி முகாம்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஷ்னிக், சுரேஷ் பச்சோரி மற்றும் மணிசங்கர் அய்யார் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடந்த மாதம் மார்ச் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஒரு பயிற்சி முகாமும் மார்ச் 31-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை மற்றொரு முகாமும் நடத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் வட்டார காங்கிரஸ் தலைவர்களுக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகள் அளவில் இம்முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதி என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த மத்திய அமைச்சர் ஒருவர், வரும் லோக்சபா தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றால் சோனியா அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாகவும் 100 தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால் தொடர்ந்தும் அவர் தலைவர் பதவியில் நீடிக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்.