2023ல் இந்தியா 2வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாகும்- அஜித் சிங்
நாக்பூர்: சர்வதேச அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 2-வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக உருவாகும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார்.
நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் பிரிதிவிராஜ் சவான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள்விழாவில் கலந்து கொண்ட மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் பேசியதாவது, ‘இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2010-11-ம் ஆண்டில் 143 மில்லியனாக இருந்தது. அது 2011-12-ம் ஆண்டில் 162 மில்லியனாக உயர்ந்து உள்ளது.
அரசு வரவேற்பு...
விமான துறையில் தனியார் முதலீட்டை அரசு வரவேற்கிறது. குறிப்பாக கொல்கத்தா, சென்னை விமான நிலையங்களின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது.
விரைவில் இரண்டாவது சந்தை...
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் புள்ளிவிவரப்படி, சர்வதேச அளவில் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா 2-வது பெரிய விமான பயணிகள் போக்குவரத்து சந்தையாக உருவாகும்.
பயணிகள் எண்ணிக்கை உயரும்...
இந்த காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 84 மில்லியனாகவும், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 336 மில்லியனாகவும் உயரும்.
விமான போக்குவரத்து அதிகரிப்பு...
நாக்பூரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சார்ஜா போன்ற மேலும் சில சர்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்தில் நாக்பூர் இணைக்கப்படும் என அஜித் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications