கள்ளழகர் ஆற்றில் இறங்க வைகை அணையில் 20ம் தேதி தண்ணீர் திறப்பு
ஆண்டிப்பட்டி: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
மதுரையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் கோலாகமாக தொடங்கியது. வருகிற 23-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. வருகிற 25-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக ஆண்டு தோறும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்தாண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையில் நவம்பர் மாதம் 59 அடி தண்ணீரே இருந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீருக்கு தண்ணீர் தேவை என்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
மதுரை, சேடப்பட்டி- ஆண்டிப்பட்டி குடிநீர் தேவைக்கு மட்டும் தினசரி 60 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்காரணமாக அணையில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து தற்போது 45.60 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை. அணையின் நீர் இருப்பை பொறுத்து மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கள்ளழகர் 25-ந் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். எனவே அணையில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்தால்தான் 25-ந் தேதிக்குள் தண்ணீர் மதுரை சென்றடையும் என்றனர்.












Click it and Unblock the Notifications