கருவை கலைத்திருந்தால் சவீதாவையாவது காப்பாற்றியிருக்கலாம்: அயர்லாந்து மருத்துவ நிபுணர் அறிக்கை
அயர்லாந்தியில் பணியாற்றிய இந்திய பல் மருத்துவர் சவீதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் சுமந்த 17-வார கருவை கலைப்பதற்காக மருத்துவமனையை நாடினார். பலமுறை வேண்டியும், கத்தோலிக்க கிறிஸ்தவ நாட்டில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறி கால்வே மருத்துவமனை மறுத்துவிட்டது.
இதனால் வயிற்றுக்குள் இருந்த குழந்தை இறந்துவிட்டது. பின்னர் அவரும் மரணமடைந்தார். கருக்கலைப்பு செய்ய மறுத்த மருத்துவமனையின் நிர்வாகத்தை கண்டித்து சவீதாவின் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக கால்வே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முன்பு நடந்த விசாரணையில் கத்தோலிக்க மத கருத்தே இந்த மரணத்திற்கு காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது, அயர்லாந்தின் முக்கிய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பீட்டர் பாய்லான் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சவீதா உயிருக்கு ஆபத்தான நிலையில் கருவை சுமந்தபோது, அவரது கருவை கலைக்க இயலாத நிலை ஏற்பட்டதே உண்மையான காரணமாக இருக்கிறது. இதனால், அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனாது.
ஆனால் அவர் கேட்டுக்கொண்டபோதே கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் அவர் இன்று உயிருடன் இருந்து இருப்பார். எப்படியோ சட்டப்படி, கருக்கலைப்பு அப்போது நடைமுறை கருத்தாக இருக்கவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.