போபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியை கைது செய்ய ஆதாரம் இல்லை: ஏ.கே. ஆண்டனி
ராஜிவ் காந்தி பிரதமர் பதவியில் இருந்தபோது இந்தியாவுக்கு போபர்ஸ் ரக பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக பெரும் அரசியல் பூகம்பம் வெடித்தது. இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட இத்தாலியின் குவாத்ரோச்சியை இந்தியாவில் இருந்து மத்திய அரசு தப்ப விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக ஆண்டனி பதிலளித்த போது,ஒட்டேவியோ குவாத்ரோச்சிக்கு எதிராக டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என 3-10-2009 அன்று அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் குவாத்ரோச்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1993-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-30-ந் தேதிகளில் குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து வெளியேறும் வரை அவரை போபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்ய சி.பி.ஐ.யிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் புதியதாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப் போவதில்லை என்றார்.